பலோப்பியன் குழாயில் கரு தங்கும் நிலையில் என்ன நடைபெறும்

கேள்வி- கருத்தரிக்கும் போது சிலவேளைகளில் கருவானது கர்ப்பப்பையினுள் தங்காது பலோப்பியன் குழாயினுள் தங்குகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இக் கருவை தக்க வைத்து ஆரோக்கியமான சிசுவாக வளர்க்க முடியுமா?

பதில் கருவானது பலோப்பியன் குழாயினுள் தங்கினால் ஒன்று இரண்டு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வளர முடியாது. ஏனெனில் பலோப்பியன் குழாயானது மிகவும் சிறிய மெல்லிய குழாய். இதனுள் கருவானது தொடர்ந்து சிசுவாக வளர இடவசதி இல்லை. ஆகையால் பலோப்பியன் குழாயானது கரு தொடர்ந்து வளரும் போது வீங்கி வெடிக்கின்றது. இதன்போது வெடித்த பலோப்பியன் குழாயில் இருந்து அதிகப்படியான குருதிக் கசிவு ஏற்படும். இதனால் பெண்ணுக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம். ஆகையால் பலோப்பியன் குழாயினுள் கருவை தொடர்ந்து வளர விட முடியாது. அத்துடன் இக்கருவை காப்பாற்றவோ அல்லது கர்பப்பைக்குள் இடமாற்றவோ முடியாது. இதனால் இப்பலோப்பியன் குழாயையும் கருவையும் சேர்த்து சத்­தி­ர­­சி­கிச்­சை மூலம் அகற்ற வேண்டும்.

ஆனால் பலோப்­பி­யன் குழாயை தங்க விட்டு கருவை மட்டும் அகற்ற முடியுமா எனச்சிலர் கேட்பார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பலோப்பியன் குழாயை தங்க விட்டால் மீண்டும் ஒரு முறை இவ்வாறு கருவானது குழாயினுள் தங்க நேரிடலாம். ஆகையால் பாதிக்கப்பட்ட பலோப்பியன் குழாயை அகற்றுவது சிறந்தது.
கேள்வி எனது வயது 45. மணம் முடித்து 20வருடங்கள் குழந்தைப் பாக்கியம் இல்லை. ஆனால் மாதா மாதம் மாதவிடாய் வரும் போது தாங்க முடியாத வயிற்று வலியால் 5 அல்லது 6 நாட்கள் அவதிப்படுகின்றேன். எவ்வித வலி நிவாரணிகளையோ அல்லது மாத்திரைகளையோ எடுத்தாலும் இவ்வயிற்றுவலி குறைவதில்லை. அண்மையில் ஸ்கான் செய்த போது கர்ப்பப்பை வீக்கமாகவும் சூலகத்தில் சிறிய சொக்கிலேட் கட்டிகள் உள்ளதாகவும் கூறுகிறார்கள். இந்நிலையில் எனக்கு எவ்வகை தீர்வுகள் பொருந்தும்.
பதில் – 45வயதில் பிள்ளைகளும் இல்லை ஆனால் அதிகப்படியான வயிற்று வலியால் தொடர்ந்து அவதிப்படுகின்றீர்கள். அத்துடன் ஸ்கானில் கர்ப்பப்பை மற்றும் சூல­கத்தில் வீக்­கங்­கள் உள்ளதாகக் கூறப்பட்­டுள்­ளது. இதனை அடி­­னோமயோசிஸ் கர்ப்பப்பை எனவும் எண்டோமெற்றியோசிஸ் சூலகம் எனவும் கூறப்படும். கடந்த 20வருடங்களாக பிள்ளைகள் கிடைக்கவில்லை அத்துடன் இவ்வகை சிக்கல்கள் இருப்பதுடன் 45வயதும் ஆகி விட்டது. தொடர்ந்து குழந்தைப் பாக்கியத்துக்கான சிகிச்சை வெற்றியளிக்கப் போவதில்லை. ஆனால் நீங்கள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வாழ்க்கையில் துன்பப்படுகின்றீர்கள். இந்நிலையில் மாத்திரைகளும் பலன் தராவிட்டால் சத்திர சிகிச்சை மூலம் கர்ப்பப்பை மற்றும் சூலகங்கள் அகற்றப்பட வேண்டும். இதன் மூலம் வலியிலிருந்து விடுபட முடியும்.
அத்துடன் குழந்தைப் பாக்கியம் இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியும். இவை தான் உங்களுக்கு நடைமுறையில் யதார்த்த ரீதியாக கூறக்கூடிய சிகிச்சை முறைகள்.
கேள்வி எனது வயது 29. முதல் கர்ப்ப காலம் 4 மாத கர்ப்பத்தில் வலி வந்து போய் விட்டது. இந்நிலையில் நான் மீண்டும் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்றால் எவ்வளவு காலத்திற்கு பின்னர் முயற்சிக்க வேண்டும்?
பதில் ஒரு தடவை இயற்கையாக கரு கலைந்து போனால் நீங்கள் உடல் உளவியல் ரீதியாக மீள்வதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் எடுக்கும்.
இதன் போது தான் நீங்கள் மீண்டும் ஒரு கருவை சுமப்பதற்கு திடகாத்திரமாக வர முடியும்.
அத்துடன் இக்காலப் பகுதியில் ருபெல்லா தடுப்பூசி ஏற்கனவே போடா விட்டால் போட வேண்டும். போலிக் அசிட் விற்றமின்கள் எடுக்க வேண்டும். உங்களுக்கு சலரோக வியாதி தைரொயிட் வியாதி இருக்குமா என பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறான ஆயத்தங்களை மேற்கொண்டு மூன்று மாத கால இடைவெளியில் மீண்டும் கருத்தரிக்க முடியும். 

(Dr குருசாமி சுஜாகரன்)

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger